வாழை சாகுபடியில் அடர் நடவு முறை லாபகரமானது என்று தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு விளக்கமளித்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வீரக்குமாரன்பட்டி காவல்காரன் காலனியில் வாழை அடர் நடவு முறை குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் கே. ராஜேந்திரன், கரூர் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் தே. தனசேகர் ஆகியோர் முகாமில் பங்கேற்று விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். அப்போது அவர்கள் கூறியது: இந்தியாவில் ஆந்திரா, அசாம், பிகார், குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஒடிசா, தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. 2009-10-ம் ஆண்டில் இந்தியாவின் வாழை உற்பத்தி 26.9 மில்லியன் டன்னாகும். மேலும், உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 37 டன்னாகும். நம் நாட்டின் வாழை உற்பத்தி திறன், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் குறைவாகவும், உற்பத்திச் செலவு அதிகமாகவும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வாழை உற்பத்திச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகப்படுத்த, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வெளியிடப்பட்ட புதிய தொழில்நுட்பமான வாழையில் அடர் நடவு முறை முடிவினை புழுதேரியிலுள்ள வேளாண் அறிவியல் மையம் செயல்படுத்தி வருகிறது. இதில் பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு பின்னர், குத்துக்கு 2 கன்றுகள் என்ற நடவு முறையில் 50 சதக் கூடுதல் கன்றுகள் நடவு செய்து, 30 சத அதிக மகசூல் கிடைத்தது. இந்த அடர் நடவு முறை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். தற்போது குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் சுமார் 70 ஏக்கரில் அடர் நடவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
நன்றி:தினமணி
நன்றி:தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக