ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட எந்தவொரு டூ வீலர்களிலும் பொருத்தும் வகையிலான ஒரே எஞ்சினை டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. அந்த நிறுவன எஞ்சினியர்களின் 7 ஆண்டுகால முயற்சியில் இந்த புதிய எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எஞ்சின் சாதாரண எஞ்சின்களை விட 20 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் புதிய தொழில்நுட்ப உருவாக்க பிரிவு தலைவர் ஹார்னி வினய் சந்திரகாந்த் கூறியதாவது:
"ஸ்கூட்டர் அல்லது பைக்குகளில் பொருத்துவதற்கு ஏதுவாக ஒரே எஞ்சினை உருவாக்கியுள்ளோம். இந்த எஞ்சின் உற்பத்தி நிலையை எட்டவுள்ளது. தற்போது 110 சிசி திறன் கொண்ட எஞ்சினை உருவாக்கியுள்ளோம். 250 சிசி வரை ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட எஞ்சின்களை இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாக்க முடியும்.
பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் எங்களது வடிவமைப்பு பிரிவு எஞ்சினியர்களின் 7 ஆண்டுகால முயற்சியில் புதிய எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு புதிய எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என்பதோடு, குறைந்த கார்பன் புகையை வெளியிடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்த எஞ்சினாக இருக்கும்.
தவிர, இந்த புதிய எஞ்சின் மூலம் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு தனித்தனியாக உற்பத்திப் பிரிவு தேவைப்படாது என்பதால் உற்பத்தி செலவு வெகுவாக குறையும்.
வரும் 2013ம் ஆண்டில் புதிய எஞ்சினுடன் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். முதலில் ஸ்கூட்டரில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வசதியாக ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்களை விற்பனை செய்வோம்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக