டோக்கியோ: எலக்ட்ரிக் கார் பேட்டரி மூலம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் குக்கர் ஆகியவற்றை இயக்கும் வகையில் புதிய சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக மிட்சுபிஷி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய சாதனத்தை ஜப்பானிலுள்ள தனது கார் வடிவமைப்பு மற்றும் ஆய்வுக்கூடத்தில் மிட்சுபிஷி உருவாக்கி வருகிறது. இன்னும் ஓர் ஆண்டில் புதிய சாதனத்தை சந்தைப்படுத்த இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறிய அளவிலான அந்த சாதனத்தை தனது ஐ-எம்ஐஇவி எலக்ட்ரிக் காரின் பேட்டரியுடன் இணைத்துக்கொள்ளும் வகையில் மிட்சுபிஷி வடிவமைத்து வருகிறது.
இந்த சாதனத்தை வாங்கி காரின் பேட்டரியுடன் இணைத்துக்கொண்டால், வாஷிங் மெஷின், ரைஸ்குக்கர்,மின்அடுப்பு உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் இயக்க முடியும்.
மிட்சுபிஷி ஐ-எம்ஐஇவி காரில் பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த 16 கேவி திறன்கொண்ட பேட்டரி மூலம வாஷிங்மெஷின் உள்ளிட்ட அதிக மின்இழுவை சக்திகொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இயக்க முடியும் என மிட்சுபிஷி கூறியுள்ளது.
பயன்பாட்டை பொருத்து ஒரு நாள் முதல் ஒன்றரை நாள் வரை காரின் பேட்டரியில் சார்ஜ் இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஜப்பானை புரட்டி போட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகிய இரட்டை இயற்கை சீற்றங்களால் அந்த நாடு நிலைகுலைந்து போனது. வீடு, உடைமைகளை இழந்து தவித்த மக்கள் செய்வதறியாது நிர்கதியாகினர்.
இதுபோன்ற சூழ்நிலைகளின்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை சிறிது குறைக்கும் வகையில் இந்த புதிய சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக